“கீழடியும், சமணர் படுகையும்
– ஓர் சுற்றுப் பயணம்”
பெரு.பழனிச்சாமி, முனைவர் பட்ட ஆய்வாளர்,
பொருளியல் புலம், மதுரை காமராசர்
பல்கலைக் கழகம், மதுரை -21. மின்னஞ்சல்: palanimku@gmail.com, அலைபேசி: 9715793829
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் (Heritage Consortium) என்ற ஒரு புதிய அமைப்பை மாண்புமிகு துணைவேந்தர்
அவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பாரம்பரியங்கள் குறித்த ஆராய்ச்சியில் மாணவர்களின்
ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அவ்வமைப்பானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் முதல் நிகழ்வாக மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடங்கி 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று பின்னர் சென்ற ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் ரூ.55 லட்சம் செலவில் மாநில தொல்லியல் துறை சார்பில் 4-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த தமிழக அரசு ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே அங்கு நடைபெறும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள். மற்றும் இரண்டாவது நிகழ்வாக மதுரையிலிருந்து மேலூர் செல்லும் வழியிலுள்ள யானைமலை சமணர் படுகையும் என தேர்வு செய்யப்பட்டு ஒருநாள் சுற்றுப் பயணம் என தீர்மானிக்கப்பட்டது.
அந்த சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக் கழக இணையத்தில் செய்தி வெளியானது. அச்செய்தியைப் பார்த்து இணையத்தின் மூலமாக விண்ணப்பித்த மாணவ-மாணவியர்களை அவ்வமைப்பின் ஒருங்கிணைபாளரான நாட்டுப்புறவியல் புலத்தின் தலைவர் பேராசிரியர். டி.தருமராஜ் அவர்கள் தேர்வு செய்து தயாரிக்கப்பட்ட பட்டியலின்படி முப்பதி ஐந்து மாணவ- மாணவியர்கள் என்ற பட்டியலோடு அந்த நேரத்தில் வந்து பதிவு செய்தவர்கள் எனச் சேர்த்து மொத்தம் நாற்பத்தி மூன்று பேர் கொண்ட குழு தயாரானது.
10.08.2019 அன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு காமராசர் சிலை அருகில் காத்திருந்த பல்கலைக் கழக பேருந்தில் பல்வேறு துறை சார்ந்த மாணவ-மாணவியர்கள் உட்பட நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர்கள் முனைவர்.கோபிநாத், முனைவர்.ஜஸ்டின் செல்வராஜ் மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர்.சீனிவாசன் எனச் சேர்ந்த குழு தயாரானது. பேருந்தின் அனைத்து இருக்கைகளும் நிறைந்துவிட பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறியது. முனைவர்.கோபிநாத், முனைவர்.ஜஸ்டின் செல்வராஜ் ஆகிய இருவரும் நான்கு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். பேருந்து போதுமான வேகத்தோடு மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடி ஊராட்சிக்குள் காலை 9.30 மணிக்கு நுழைந்தது. கீழடியைத் தொட்ட மகிழ்வை சுமந்தபடி எங்கள் குழு களமிறங்கியது.
பேருந்தைவிட்டு இறங்கியவுடன் ஆங்காங்கே பிரியத் தொடங்கியவர்களை அழைத்து ஒன்றாக ஒருங்கிணைத்தார் ஒருங்கிணைப்பாளர். ஆராய்ச்சிக் களத்திற்குள் சென்று எப்படி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற வரைமுறைகளை பற்றி விளக்கிக் கொண்டிருந்தவரைத் தொடர்ந்து, அங்கு முனைவர்.கோபிநாத் அவர்களின் நான்கு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்த மதுரை காமராசர் பல்கலைக் கழக கலை வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர் முனைவர். சேதுராமன். அவர்கள் வழங்கிய ஆலோசனைகளையும் மனதில் சுமந்தபடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெறும் இடத்தை நோக்கி நகரலானோம்.
![]() |
Add caption |
முனைவர். சேதுராமன் அவர்களோடு வந்திருந்த முனைவர்.பாபுவும் அந்த
நொடியில் எங்களோடு ஐக்கியமானார். களத்திற்குள்
சென்றோம், ஒருங்கிணைப்பாளரின் அழைப்பை ஏற்று அங்கு விரைந்து வந்த கீழடி தொல்லியல் துறைப்
பொறுப்பாளரும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான முனைவர். சேரன்
விரைந்து வந்தார். அனைவருக்கும் வணக்கம் சொல்லி வரவேற்ற அவர் கீழடி அகழ்வாராய்ச்சி
குறித்து ஆங்கிலத்திலேயே நீண்டதொரு விளக்கத்தைத் தந்தார். அதை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு
சற்று நகர்ந்து சென்றோம்.
பத்துக்கு பத்து என்ற நீள, அகள வடிவுடைய அளவில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகள் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தன, சில குழிகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன, சில குழிகளைத் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒருபுறம் அந்த குழிகளில் தோண்டிய மண்களைத் தரம் பிரிக்கும் பெண்கள் இரண்டு, மூன்று இடங்களில் சேமித்துக் கொண்டிருந்தனர். அங்கே கண்டெடுக்கப்பட்ட கற்கள், மற்றும் ஓடுகளும் ஓரிடத்தில் குவியல் குவியலாக சேமிக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நூற்றாண்டின் கதை சொல்லும் நிறமுடையதாக எங்கள் கண்களுக்கு காட்சியளித்தன.
அப்பகுதிவாழ் ஏழை மக்களே அங்கு தினக்கூலிகளாக பணியில்
அமர்த்தப்பட்டு கடும் வெயிலும் பாராது பணி செய்துகொண்டிருந்தனர். ஆண்களுக்கு 375 என்ற
கூலியும் பெண்களுக்கு 300 என்ற கூலியும் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது. மேலும் அங்கு
2 ஆராய்ச்சி மாணவிகள் பணியாட்களோடு களத்தில் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அங்கு
கிடைக்கும் பொருட்களை சேகரிக்கின்றனர்.
அதில் ஆச்சர்யம் என்னவென்றால் கீழடியில் கண்டு எடுக்கப்பட்ட சில பொருட்களின் வடிவம் வெளிநாட்டு வணிகப் பொருட்களோடு ஒத்துப்போகிறது எனவும் அதன் மூலம் பண்டைய காலத்திலேயே வெளிநாட்டிற்கும் நம் நாட்டிற்கும் வணிகத் தொடர்பு இருந்திருப்பது மனதிற்குள் எளிதாகப் புரிய வைத்தார் தொல்லியல்துறைப் பொறுப்பாளர்.
பின்னர் மூடியிருந்த உறைக்கிண்றை திறந்து காட்டினர் பணியாட்கள் உறைக்கிண்று குறித்து விளக்கினார் முனைவர். சேரன். அந்த உறைக் கிணறு மண்ணால் ஆன கற்களை வட்ட வடிவில் செய்து தீயில் சுட்டு, ஒன்றின் கீழ் ஒன்றான அளவுகளில் சிறிதும், பெரிதுமாக வடிவமைக்கப்பட்டு சரிந்து விடாதபடிக்கு சரிசெய்து பூமியில் புதைத்து அதன் மூலமாக நீராதாரம் பெற்று வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
கிட்டத்தட்ட 2,500 ஆண்டு காலகட்டத்தைத் தாண்டிய வயதுடையதாக இருப்பதாக இந்த உறைக்கிணறு கண்டறியப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ஆதிகாலத்திலேயே நம் தமிழ் குடி எப்படிப்பட்ட அறிவு சார்ந்த குடியாக இருந்திருக்கிறது என்பதை ஒருகனம் மனதிற்குள் எண்ணிப் பார்க்கும்போது மிகுந்த வியப்பாக இருந்தது. இந்த உறைக்கிணறுகளை இன்றும் சேரநாடு என்று சொல்லகூடிய கேரளாவில் காண முடிகிறது.
அதன் பின்னர் மண்ணிற்குள் புதைந்து நின்ற நீளச்சுவர், இரட்டைச் சுவர், சிறிய அடுக்கு கொண்ட குட்டிச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த சுவர்களில் பெரிய செங்கலும், சிறிய செங்கலும் என வைத்து மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பெரிய செங்கல்களால் ஆன வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியுடையதாகவும், மழைக்காலத்தில் வெப்பமுடையதாகவும் மாற்றமடையும் தன்மை உடையது என்பதும் அங்கு கூடுதலான தகவலாக கிடைத்தது.
இன்னும் கீழடியில் புதைந்திருக்கும் இரகசியங்கள் தோண்டி எடுக்கப்பட வேண்டும். நம் தமிழர்களின் மரபுகள் காக்கப்பட வேண்டும் என்ற ஆவலைச் சுமந்தபடி. அனைவரும் ஒரு குழு புகைப்படம் எடுத்தபடி பேருந்தில் ஏறினோம்.
அங்கிருந்து சரியாக 11.00 மணிக்கு புறப்பட்ட
பேருந்து மதுரை மேலூர் செல்லும் வழியாக நின்றிருந்த யானை மலை சமணர் படுகையை 11.30 மணிக்குத்
தொட்டது. அங்கு இறங்கி கிட்டத்தட்ட 100 படிக்கட்டுகள் ஏறிச் சென்றொம். பாதிப்படிகளில்
ஏறும்போதே கீழிருந்து ஒரு குரல் சார், சார் என்று முனைவர் சேதுராமன் அவர்களை நோக்கி
வர யார் என்று திருப்பிப் பார்த்தார். நான் தான் ரவிச்சந்திரன் வணக்கம் சார் என்றார்,
மேல போங்க நா குழிச்சிட்டு வாறேன் என்றவர். எங்களுக்கு பின்னாடியே அங்கு வந்து சேர்ந்தார்.
பார்ப்பதற்கு அந்த மலை யானை போன்ற அழகோவியமாக காட்சியளித்தது. ஆகவே அம்மலை யானைமலை என்று பெயர் பெற்றிருக்கலாம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மலையில் பாண்டியர் காலத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. அது தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கும், நரசிங்க பெருமாளுக்குமாய் கட்டப்பட்டிருக்கின்றன.
சைவமும், வைணவமும் என்று சேர்ந்து சிறப்பு பெற்ற இம்மலையில் பழங்காலந்தொட்டே சமண சமய முனிவர்கள் தங்கிய குகையும் அவர்கள் மூலிகைப் பொருட்களை அரைக்க பயன்படுத்திய சிறு பாறைக் குழிகளும் இன்றும் காணப்படுகின்றன. அங்கு அமர்ந்திருந்த ஒரு சன்னியாசி சிலரை அழைத்து அந்த பாறையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள் மன அமைதி கிடைக்குமென்றார் சிலர் அமர்ந்து எழுந்தனர். நானும் அமர்ந்தேன் வெளி வெப்பம் உள்ளே சற்றும் இல்லை ஒரு இதமான காற்றோடு மனம் அமைதியானது. நேரக்குறைவால் அவருக்கு நன்றி சொல்லி எழுந்தேன், பிறரின் வாய்பிற்காக.
முனைவர் சேதுராமன் அவர்கள் யானை மலை குறித்த வரலாற்றை விளக்கி முடித்து நன்றிகூற. ரவிச்சந்திரனும் சில விசயங்களை கூறினார். அந்த மலையின் பாதுகாவலனாக வாழும் அவர் பகல் முழுவதும் அங்குதான் இருப்பாறாம். மாலை 6 மணிக்குமேல்தான் வீட்டிற்குச் செல்வாராம். அந்த மலையைப் பாதுகாப்பதுதான் அவரது முழுநேர பணியாம். ஆனால் இதுவரை அவருக்கு அரசு எந்தவித சம்பளமும் தரவில்லையாம், அங்கு சுற்றிப்பார்க்க வரும் ஆர்வலர்கள் தரும் பத்து, நூறைப் பெற்றுதான் அவரும், அவரோடு இருக்கும் நபர்களும் அன்றாடச் செலவிற்கு வைத்துக்கொள்வதாக கூறினார்.
மேலும் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறேன். வருகிற சுதந்திர தினத்திலிருந்தாவது அரசு சம்பளம் தருமென எதிர்பார்க்கிறேன் என்றார். அதைக் கேட்டு உறைந்து போன முனைவர். சேதுராமன் அவர் சட்டைப் பையிலிருந்த இருனூறு ரூபாயை எடுத்துக்கொடுத்து அங்கிருந்த இரண்டு நபர்களைக் கைகாட்டி எல்லோருக்கும் டீ வாங்கி கொடுங்க என்றார். அதைப் பெருந்தன்மையோடு பெற்றுக்கொண்ட ரவிச்சந்திரன் சிறிது புன்னகைத்தார்.
Add caption
|
எல்லோரும் பேருந்தை வந்தடைய நேரம் சரியாக 12.20 மணி, அங்கிருந்து அனைவரையும் சரிபார்த்தபடி ஒருங்கிணைப்பாளர் கையசைக்க பேருந்து நகர்ந்தது. கொஞ்ச தூரம் சென்ற பேருந்தை இடையிலேயே நிறுத்தக்கூறிய முனைவர் சேதுராமன் அவர்களும், முனைவர்.பாபு அவர்களும் அனைவருக்கும் நன்றி கூறி, எங்களிடமிருந்து விடைபெற்றார்கள். சரியாக 1.15 மணிக்கு பல்கலைக் கழகத்தை வந்தடைந்தது பேருந்து. மதிய உணவு தயாராக இருந்தது. அவ்வுணவை அனைவரும் பெற்றபடி பல்கலைக் கழத்திற்கும், ஒருங்கிணைப்பாளருக்கும் நன்றி கூறி பிரிந்து சென்றனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கொடுத்த இந்த வாய்ப்பு மிக அருமையான வாய்ப்பு. இதில் கலந்து கொண்டு நான் பயன் பெற்றமைக்காக பெரு மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதற்கு காரணமான நண்பர் கந்தசாமிக்கு நன்றி கூற கடமைப்படுகிறேன். மீண்டும் இப்படியான நல்வாய்ப்பிற்காக காத்திருப்பேன் என்ற உறுதியோடு, நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு மீண்டும் என் நன்றிகள் மதுரை காமராசர் பல்கலைக் கழக மாண்புமிகு துணைவேந்தர் அவர்களுக்கும், ஆய்வுக்களத்தில் எங்களோடு முழுமையாக பயணித்த ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் மற்றும் சக பேராசிரியர்களுக்கும்.